சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி செய்தவர்கள் மீது போலீசில் புகார்!
By: Monisha Wed, 30 Sept 2020 10:32:04 AM
தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லகான நடித்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தில் அழைத்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி டுவிட்டர் மூலமாக உதவிகள் கேட்கும் பலருக்கு அவர் தயங்காமல் உதவி செய்துள்ளார். மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு டிராக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பறி போய் விட்டதால் காய்கறி விற்பனை செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் பணி, உள்பட சோனுசூட் செய்த உதவிகளின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தநிலையில் சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது. மர்ம நபர்கள் சோனுசூட் பெயரில் உங்களுக்கு உதவ வேண்டுமானால் ரூ.1,700 செலுத்த வேண்டும் என்று ஆன்லைனில் தகவல் அனுப்பி அந்த தொகையை பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து சோனுசூட் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுபற்றி சோனுசூட் கூரியதாவது:- "எனது பெயரில் மோசடி நடப்பதாக நிறைய புகார்கள் வந்துள்ளன. மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர தயாராக இருக்கிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டாம்" என்று கூறியுள்ளார்.