ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
By: Monisha Wed, 09 Sept 2020 10:08:12 AM
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டது. இதனால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
சுமார் 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா தலம் திறக்கப்பட்டதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நீலகிரியில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.