- வீடு›
- செய்திகள்›
- ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி சாலைகளில் திரண்ட மக்கள்
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி சாலைகளில் திரண்ட மக்கள்
By: Karunakaran Mon, 26 Oct 2020 12:42:38 PM
ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு ஏற்பட்டது. மேலும் அங்கு ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகின. இதன் காரணமாக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரளான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களில் பலர் ஈராக்கிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
நேரடி வெடிமருந்துகளையும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களைக் கலைத்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என ஈராக் பாராளுமன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கூறினார். தற்போது, ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் திரண்டனர்.
ஓராண்டு நிறைவை குறிக்கும் விதமாக, பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரங்களில் கூடிய மக்கள், போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்கள் பொறித்த கொடிகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு வருடம் முன்பு அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை புதுப்பிக்க போராட்டக்காரர்கள் தலைநகரிலும், நஜாஃப், நசீரியா மற்றும் பாஸ்ரா உள்ளிட்ட பல தெற்கு நகரங்களிலும் அணிவகுத்துச் சென்றனர். பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்தில், ஈராக் இளைஞர்கள் ஈராக் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுடன் பதாகைகளை ஏந்தினர்.