சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நாளை துவங்குகிறது
By: Monisha Tue, 29 Sept 2020 10:13:10 AM
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நாளை முதல் வரும் அக்டோபர் 12-ந் தேதி வரை சென்னையில் உள்ள எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 ஆண்-பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் சுமார் 5,500 பேர் தேர்வானார்கள். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நாளை (30-ந் தேதி) முதல் வரும் அக்டோபர் 12-ந் தேதி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தினமும் 600 பேர் வீதம் கலந்துகொள்கிறார்கள்.
இதில் பணியாற்றும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் 200 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டும் பணி செய்ய முடியும்.
இதுபோல் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களும், கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) இணை கமிஷனர் பாண்டியன் தேர்வு குழு அதிகாரியாக செயல்படுவார்.