லாரா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்ட அதிபர் டிரம்ப்
By: Nagaraj Mon, 31 Aug 2020 8:48:05 PM
பேரழிவாக அறிவித்தார்... அமெரிக்காவை 280 கி.மீ வேகத்தில் தாக்கிய லாரா சூறாவளி புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தைப் பார்வையிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், பேரழிவாக அறிவித்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான லாரா புயல் மெக்சிகோ வளைகுடா வழியே 27 - ம் தேதி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைத் தாக்கியது. மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.
பல இடங்களில் வீட்டுக் கூரைகள் பிய்த்துக்கொண்டு பறந்தன. சில இடங்களில்
கட்டிடங்கள் கூட இடிந்து விழுந்தன. சூறாவளி புயலால் பல இடங்களில் 25 செ.மீ
அளவில் கனமழை பெய்தது. புயல் பாதிப்பால் லூசியானா, டெக்சாஸ், அர்க்கன்சாஸ்
மாகாணங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இன்னும் லட்சக்கணக்கான
வீடுகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
லாரா புயல் கடந்த பாதையில்
வசித்த 40 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களில் ஆபத்தான இடங்களில்
தங்கியிருந்த ஆறு லட்சம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பான
இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனால் பெருமளவில்
உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஜெனரேட்டர்களின் பாதுகாப்பற்ற
செயல்பாட்டிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடால் உயிரிழந்தவர்கள் உள்பட
15 பேர் மட்டுமே புயலுக்குப் பலியாகியுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இதற்கிடையே லாரா புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த
அதிபர் ட்ரம்ப், லூசியானா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பைப்
பேரழிவாக அறிவித்துக் கையெழுத்திட்டுள்ளார்.