நாளை அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது
By: Nagaraj Mon, 02 Nov 2020 08:46:31 AM
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபைடன் களம் காண்கிறார்.
8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதேபோல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும்
பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான
மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில்
பங்கேற்றார். இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு
ஜோபைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
ஜோபைடனின் பிரசார பேரணிகள்
மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன. ஆனால்
ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி
உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.