கொரோனா நோய் தொற்று குறித்து விசேட கவனம் செலுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்
By: Nagaraj Thu, 12 Nov 2020 8:25:28 PM
விசேட கவனம் செலுத்த அறிவுறுத்தல்... தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொரோனா விசேட செயலணியுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி தொற்றாத நோய்களினால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பதற்கும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து
விலகியிருப்பதற்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் உடனடியாக
வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேநேரம், நேற்றைய
கூட்டத்தின்போது கொரோனா பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பான
தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் எழக்கூடிய வைரஸுடன் தொடர்புடைய
நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஆராயப்பட
வேண்டிய துறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரதான
வைத்தியசாலைகளுக்கு வருவதில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இனம்கண்டு ஒரு
காலத்தில் நாடுபூராகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேச
மருந்தகங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
அதற்குத் தேவையான மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய பணிக்குழாமினரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.