Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுவையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By: Monisha Sat, 05 Dec 2020 10:29:50 AM

புதுவையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். இதனால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஏற்கனவே இரண்டு நாட்கள் தொடந்து மழை பெய்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் பகல் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் பெரிய வாய்க்கால், உப்பனாறு போன்ற வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிச் சென்றன. நகரில் உள்ள சிறுசிறு கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து வரும் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாமல் போனதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதுதவிர ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது. சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. பிற்பகலில் ஓரளவு மழை ஓய்ந்ததால் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. காமராஜர் சாலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களால் அங்கு பணம் எடுக்க செல்ல முடியவில்லை. 45 அடி ரோட்டில் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் அங்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரில் எங்கு பார்த்தாலும் மழையால் சேதமடைந்து சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. 100 அடிரோடு, கடலூர் ரோடு, விழுப்புரம் ரோடு என பல்வேறு சாலைகள் பெயர்ந்து காணப்பட்டன.

pondicherry,rain,flood,normal life,vulnerability ,புதுவை,மழை,வெள்ளம்,இயல்பு வாழ்க்கை,பாதிப்பு,

புதுவை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மழை நீரை பொதுப்பணி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். சாலைகளில் உள்ள வாய்க்கால்களில் அடைப்பு இருந்தால் அதை அப்புறப்படுத்தினார்கள். இரவு, பகலாக இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். தற்போது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பது மேலும் அவர்களை கவலையடைய வைத்துள்ளது.

மழையால் பாதிப்பு அதிகரித்ததையொட்டி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேற்று காலை முதலமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இருந்தவர்களிடம் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு சில இடங்களில் கூடுதலாக மோட்டார்களை வைத்து மழைநீரை வெளியேற்ற கேட்டுக்கொண்டார்.

Tags :
|
|