Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திட்டமிட்டபடி 31-ம் தேதி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார்

திட்டமிட்டபடி 31-ம் தேதி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார்

By: Monisha Sun, 27 Dec 2020 1:54:07 PM

திட்டமிட்டபடி 31-ம் தேதி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார்

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது படப்பிடிப்பு குழுவில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த மூன்று நாட்களாக ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் செய்தி குறிப்புகளை வெளியிட்டது. நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ரத்த அழுத்தத்தில் தொடர்ந்து மாறுபாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

shooting,corona,health,therapy,discharge ,படப்பிடிப்பு,கொரோனா,உடல்நிலை,சிகிச்சை,டிஸ்சார்

இதையடுத்து ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் உறுதி செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால், இரவிலோ அல்லது நாளையோ சென்னை திரும்புவார்’’ என கூறியுள்ளார். சென்னை திரும்பிய பிறகு ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். கட்சி நிர்வாகிகள் யாரையும் நேரில் சந்திக்காமல் போனிலேயே சில நாட்கள் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

வருகிற 31-ம் தேதி புதிய கட்சியை தொடங்குவதற்கான தேதியை ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் கட்சி தொடங்கும் தேதியை 31-ம் தேதி ரஜினிகாந்த் திட்டமிட்டபடி வெளியிடுவார் என்றே அவரது ரசிகர்களும், மக்கள் மன்ற நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராகவேந்திரா மண்டபத்துக்கு நேரில் சென்று 31-ம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட ரஜினிகாந்த் முதலில் திட்டமிட்டு இருந்தார். தற்போது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக ராகவேந்திரா மண்டபத்துக்கு செல்லும் முடிவை ரஜினி கைவிட வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே 31-ம் தேதி அன்று ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதியை அறிக்கை மூலமாக வெளியிடுவார் என்று மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர். ரஜினிகாந்த் வெளியிட உள்ள அறிவிப்பில் கட்சி தொடங்கும் தேதி மற்றும் மாநாடு தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 31-ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தேதியை அறிவித்த பிறகு மேலும் சில நாட்கள் ரஜினி வீட்டிலேயே தங்கி இருந்து ஓய்வு எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|