ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி கொண்டு தர்காவை சுத்தம் செய்ய அனுமதி மறுப்பு
By: Nagaraj Fri, 12 June 2020 10:35:35 AM
அனுமதி மறுப்பு... ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் உத்தரபிரதேசத்தின் தர்காவை சுத்தம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆலா ஹசரத் தர்கா அமைந்துள்ளது. கொரோனா பரவலால் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் வழிபாட்டுத் தலங்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழிபாட்டுத் தலங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் பரேலி தர்காவில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி தெளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலா ஹசரத் தர்காவின் தலைமை இமாம் முப்தி நஷ் தர் பரூக்கீ கூறியதாவது:
"போதை தரும் ஆல்கஹாலை பயன்படுத்த இஸ்லாத்தில் தடை உள்ளது. எனவே ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட கிருமிநாசினிகளை முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது. இதை நன்கு அறிந்த பின் மசூதி, தர்காக்களில் பயன்படுத்துவது இஸ்லாத்தில் குற்றமாகும். எனவே, ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறு கோரியுள்ளேன்" என்றார்.
இதுபோல, வழிபாட்டுத்தலங்களில் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்த அனுமதி மறுப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலின் மாவைஷ்ணோவதம் நவ் துர்கா கோயிலின் தலைமை பண்டிதரான சந்திரசேகர் திவாரி கிருமிநாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, உ.பி.யின் தெய்வீக நகரமான மதுராவின் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில்களான இஸ்கான், பாங்கே பிஹாரி உள்ளிட்டவற்றிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, இந்த வழிபாட்டுத்தலங்களில் ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினி பயன்பாடு தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.