இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா?...முதலமைச்சர் இன்று ஆலோசனை
By: Monisha Mon, 24 Aug 2020 09:33:17 AM
இ பாஸ் அனுமதியை தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. அண்மையில், இதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இபாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இ பாஸை ரத்து செய்தால் கொரோனா தடுப்பு என்பது சவாலாகி விடும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா? என்பது குறித்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.