லண்டன் மாநகரில் மனைவி, மகனை கொன்று விட்டு தமிழர் தற்கொலை
By: Karunakaran Thu, 08 Oct 2020 3:47:29 PM
இங்கிலாந்து நாட்டில், லண்டன் மாநகரின் மேற்கு பகுதியில் பிரெண்ட்போர்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குகராஜ் சிதம்பரநாதன்- பூர்ணா காமேஷ்வரி சிவராஜ்என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கைலாஷ் குகராஜ் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் தமிழ் குடும்பத்தினர் ஆவார்கள். இந்நிலையில், திடீரென பூர்ணா பற்றி எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் அவரது உறவினர் கவலையோடு, லண்டன் பெருநகர போலீசை தொடர்பு கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார்.
திங்கட்கிழமையன்று போலீசாரும் அந்த வீட்டாருடன் பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. அதன்பின், செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் போலீசார் அந்த குடியிருப்புக்கு சென்றனர். கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற போலீசார் அங்கு, பூர்ணாவும், அவரது மகன் கைலாசும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டனர்.
குகராஜ் சிதம்பரநாதன் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவரும் இறந்து விட்டார். குடும்ப தகராறில் குகராஜ் சிதம்பரநாதன் ஆத்திரம் அடைந்து, மனைவியையும், மகனையும் கொலை செய்து விட்டு, தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குகராஜ் சிதம்பரநாதன் தற்கொலை செய்து கொண்டதின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் போலீசார், இந்த குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நாயுடன் நடந்து செல்வதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இந்த கொடூர சம்பவம், சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படுத்தி உள்ள பேரழிவை வார்த்தைகளால் கூறி விட முடியாது என்று கூறினர். குகராஜ் சிதம்பரநாதன், பூர்ணா தம்பதியர் மலேசியா, இலங்கை தமிழ் குடும்பங்களை சேர்ந்த தம்பதியர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.