சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின
By: Nagaraj Mon, 06 July 2020 2:38:11 PM
இன்று முதல் வழக்கமான நேரத்தில் வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள்) இன்று திங்கள்கிழமை முதல் வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்படும்.
இதுதவிர, பொதுமக்களும் பரிவா்த்தனை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் பொது முடக்கம் 6-ஆவது முறையாக ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு பொது முடக்கம் நேற்றுடன் (5ம் தேதி) வரை நிறைவடைந்தது.
இதன் காரணமாக முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்ட சென்னை காவல்
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வங்கிக் கிளைகள் அனைத்தும் 33 சதவீத
ஊழியா்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன. மேலும் இந்த
வங்கிகளில் பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம்
செய்யும் ஏஜென்சிகள் ஆகியவற்றின் தினசரி வசூலாகும் பணத்தைக் கட்டுவதற்கான
பரிவா்த்தனை மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது உள்ளிட்ட அத்தியாவசியமான
சேவை மட்டுமே நடைபெற்றன. பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை வழங்கப்படவில்லை.
இந்நிலையில்
முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று முதல் (ஜூலை 6)
தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், இங்குள்ள வங்கிகள் 50 சதவீத
ஊழியா்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமான நேரத்தில்
செயல்படும். இதுதவிர, பொதுமக்களும் பரிவா்த்தனை மேற்கொள்ள வங்கிகளுக்குள்
அனுமதிக்கப்படுவா்.
எனினும், மதுரையில் முழு பொதுமுடக்கம் ஜூலை
12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு பொதுமுடக்கம்
பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் வரும் ஜூலை 10ம் தேதி
வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக
மட்டுமே செயல்படும். பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்பட மாட்டாது என
வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.