சாத்தான்குளம் வழக்கில் 5 பேரிடமும் விசாரணையை தொடங்கியது சிபிஐ
By: Nagaraj Tue, 14 July 2020 8:07:43 PM
சாத்தான் குளம் கொலை வழக்கில் 5 பேரிடமும் விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்ட வருகின்றன. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரியவரும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் முதலில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ்,
பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் காவலில்
எடுக்க சிபிஐ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ
காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நடைபெற்றது.
சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய
நிலையில், 3 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து 5 போலீசாருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் சிபிஐ அலுவலகத்திற்கு
அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5
பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. மதுரையில் உள்ள சிபிஐ
அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.