பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வங்காள தேச அரசு இன்று ஒப்புதல்
By: Karunakaran Tue, 13 Oct 2020 10:56:18 PM
உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. மேலும் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. இது போன்றார் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காளதேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பி வருகிறது.
இதுகுறித்து வங்காளதேச சட்டத்துறை மந்திரி அனிசுல் ஹக் அளித்த பேட்டியில், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு இந்த சட்ட முன்மொழிவு வழிவகுக்கிறது என்று கூறினார்.
மேலும் அவர், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.