தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா; மதுரையை கலக்கும் பிரமாண்ட போஸ்டர்கள்
By: Nagaraj Tue, 15 Sept 2020 4:22:08 PM
தவிர்க்க முடியாத தலைவன்... நீட் தேர்வை கடுமையாக விமர்சித்திருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி தவிர்க்க முடியாத தலைவன் என பட்டம் சூட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒட்டி நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தின் குரலாக தமது கொந்தளிப்பை கொட்டியிருந்தார் நடிகர் சூர்யா.
இந்த அறிக்கையில் சூர்யா பதிவு செய்திருந்த ஒவ்வொரு அடியும் சவுக்கடியாக இருந்தது.
அதில், நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை
மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு
தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்
கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது என வேதனை
தெரிவித்து இருந்தார் சூர்யா.
இந்த நிலையில்தான் மதுரை சுவர்களை
தெறிக்கவிடும் வகையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி சூர்யாவுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர் அவரது ரசிகர்கள். இதில், திரைப்பட வசனங்களில் மட்டும்
குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல- சமூக பிரச்சனைகளுக்கு முதல் குரல்
கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா என அவரது ரசிகர்கள் புகழாரம்
சூட்டியுள்ளனர்.