பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர்
By: Monisha Wed, 11 Nov 2020 1:51:22 PM
பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
"நீட் தேர்வு பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள், ஷூ-சாக்ஸ், தயாராக உள்ளது. விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.
பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு முகாமில், தமிழகம் முழுவதும் 45 சதவீத பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்" என்று கூறினார்.