வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமம்
By: Nagaraj Sat, 14 Nov 2020 10:19:08 PM
வவ்வால்களுக்காக தீபாவளி கொண்டாடாத கிராமம்... சேலம் வாழப்பாடி அருகே உள்ள அக்ரஹாரம் நாட்டாமங்கலம் கிராமத்தில் பழந்தின்னி வவ்வால்கள் கூட்டம், பழமையான மரங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தில் உள்ளே நுழையும்போதே வவ்வால்கள் சத்தம் அனைவரையும் வரவேற்கிறது. வவ்வால்கள் இரவு நேரங்களில் உணவிற்காக சுற்றியுள்ள ஏற்காடு, கொல்லிமலை, கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளுக்கு சென்றுவிட்டு பகல் நேரங்களில் தனது இருப்பிடத்திற்கு வந்து உறங்குகின்றன.
அவற்றை கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகின்றனர். இங்கு வவ்வால்களை யாருக்கும் வேட்டையாட அனுமதியில்லை. மேலும், வெடிச் சத்தத்தால் ஏற்படும் அதிர்வுகளாலும் புகைமூட்டத்தாலும் வவ்வால்களுக்கு தீங்கு ஏற்பட்டு, வேறு இடங்களுக்கு அவை இடம்பெயர்ந்துவிடும் என்பதால் கிராமத்தில் வவ்வால்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேளங்கள் கொட்டுவதற்கும், பட்டாசு வெடிப்பதற்கும் அனுமதி இல்லை என்று கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இந்தப் பகுதிக்கு வவ்வால் தோப்பு என்று பெயர் வைத்து மக்கள் அழைக்கின்றனர்.
இந்த கிராம மக்களின் தீபாவளி கொண்டாட்டம் என்பது பட்டாசு வெடிக்காமல், கறி
சமைத்து, இனிப்பு வகைகளுடன் சாப்பிடுவதுதான் என்றும், நினைவு தெரிந்தவரை
யாரும் இங்கு பட்டாசு வெடித்ததில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும்
இந்த வவ்வால் கூட்டங்களைப் பாதுகாக்குமாறு இப்பகுதி மக்கள் தம்
தலைமுறையினருக்கு தொடர்ந்து வலியுறுத்தியும் பின்பற்றியும் வருகின்றனர்.
இங்கு வசிக்கும் வவ்வால்களைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும்
மக்கள் வந்ததாகக் கூறுகின்றனர்.