சீனாவில் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழப்பு
By: Karunakaran Sat, 03 Oct 2020 2:23:52 PM
சீனாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு தேசிய தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தொடங்கி 8 நாட்களுக்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்கள் ஆர்வமுடன் அங்குள்ள சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் தையுவான் நகரில் உள்ள கேளிக்கை பூங்காவில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர்.
கேளிக்கை பூங்காவில் உள்ள பனி சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடத்தில் திடீரென தீ விபத்து நேரிட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதன்பின் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.