- வீடு›
- செய்திகள்›
- நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை; நயினார் நாகேந்திரன் வருத்தம்
நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை; நயினார் நாகேந்திரன் வருத்தம்
By: Nagaraj Tue, 04 Aug 2020 10:02:43 AM
பாஜகவில் வருத்தத்துடன் இருக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்ட சூழலில், புதிய மாநிலத் தலைவர் லிஸ்டில் நயினார் நாகேந்திரன் பெயரும் இருந்தது. ஆனால், தேசிய தலைமையால் எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பொதுச் செயலாளர் போன்ற முக்கியமான பதவி வழங்கப்படும் என நயினார் எதிர்பார்த்தார். ஆனால், மீண்டும் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர் பாஜகவிலிருந்து இடம் மாறத் தயாராகி வருகிறார் என்று செய்திகள் உலா வந்தது.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன், நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு
நேரில் சென்று ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு டெல்லி தலைமையிடம் சொல்லி
வைத்திருப்பதாகக் கூறி சமாதானப்படுத்தி வந்தாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாகவே
தெரிவித்துவிட்டார்.
“வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம்
திமுகவில் இணைந்தது வேதனையளிக்கிறது. ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ
வி.கே.ஆர்.சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை தடுத்திருக்க வேண்டும். தேர்தல்
வரும் சூழலில் இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சியில்
சேர்ந்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல்
நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருக்க வேண்டும் என்ற
நயினார், “கடந்த மாதம் பாஜகவின் மாநில பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள்
நியமிக்கப்பட்டதில் எனக்கு மன வருத்தம் உள்ளது. இதுதொடர்பாக தலைமையிடமும்
எடுத்து வைத்துள்ளேன். தலைமை மீது எனக்கு மன வருத்தம் இருப்பது உண்மைதான்.
ஆனால், கட்சி மாறப்போவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை” என்றும்
கூறியுள்ளார்.
பாஜகவில் முக்கிய தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன்
பொதுவெளியில் இவ்வாறு தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.