மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான வாத்து, கோழி குஞ்சுகள் சாவு
By: Monisha Fri, 27 Nov 2020 2:43:13 PM
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக எங்கும் வெள்ள காடாக மாறியது. விழுப்புரம் அருகே ஆனாங்கூர் பகுதியில் வாத்து பண்ணை வைத்து நடத்தி வரும் முருகனின் பண்ணைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் வாத்து குஞ்சுகள் நீரில் மூழ்கி செத்தன. இதனால் முருகன் மிகவும் வேதனை அடைந்தார்.
வாத்து குஞ்சுகள் உயிரிழந்ததால் ரூ.4 லட்சம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வாத்து குஞ்சுகளை வாங்கி வந்து பண்ணையில் விட்டதாகவும் கூறிய அவர், புயல் நிவாரணமாக தமிழக அரசு ஆடு, மாடுகள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதுபோல் தனக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க கூறினார்.
திண்டிவனம் அடுத்த வீடுர் தோப்பு தெரு பாதையை சேர்ந்த ராஜகோபால் மகன் ருத்ரமூர்த்தி என்பவர் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைத்து நடத்தி வருகிறார். இதில் சுமார் 1,600 கோழிக்குஞ்சுகள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் பண்ணையில் இருந்த 1600 கோழி குஞ்சுகளும், நீரில் மூழ்கி செத்தன. இதனால் ராஜகோபால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து திண்டிவனம் தாசில்தார் செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.