மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை; 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
By: Monisha Sat, 10 Oct 2020 5:18:55 PM
மதுரையில் நேற்று காலையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
நகரின் அனைத்து பகுதிகளிலும் மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழையானது, இரவிலும் நீடித்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரங்களில் பெரியார் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். நேற்று மழையின் காரணமாக 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மழை நீர் தேங்கி நின்றதால், பெரியார் பஸ் நிலைய பகுதியில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.