கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வர அனுமதி
By: Monisha Thu, 17 Sept 2020 4:18:21 PM
தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் சுற்றுலா நகரங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் கேட்டு கெடுபிடி செய்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதே போல அரசு பஸ்களில் கொடைக்கானல் வருபவர்களுக்கும் இ-பாஸ் கேட்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் மிகுந்த அவதியடைந்து வந்தனர். அதனால் இன்று முதல் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காஆகியவை மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாண்டலின் வகை பூக்களும், ஹைரேசின் வகை கீரைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம், இதய வடிவம், நட்சத்திர வடிவம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளர்வுகளுக்கு பிறகு இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்ததால் இத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.