கொரோனா வேகமாக பரவும் சூழலில் 2ஆவது தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்
By: Karunakaran Wed, 30 Dec 2020 11:19:41 PM
பிரிட்டனில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரசின் முந்தைய நிலையை விட உருமாற்றம் பெற்ற புதிய வகை வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
எனவே, அடுத்தவாரம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டின் துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
மொத்தம் 100 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசி மருந்து வழங்க பிரிட்டன் அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முதல் காலாண்டில் மில்லியன் கணக்கான டோஸ் மருந்துகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.