கொரோனாவால் வேலை இல்லாத நிலை; மூட்டை தூக்கும் பட்டதாரி இளைஞர்கள்
By: Nagaraj Fri, 03 July 2020 5:05:55 PM
கொரோனாவால் அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். இதனால் பட்டதாரி இளைஞர்கள் பலரும் சுமை தூக்கும் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். அந்த வேதனையின் பதிவுதான் இது.
நீலகிரி மாவட்டம் என்றாலே தேயிலைதான். தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பூண்டு போன்றவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக நீலகிரியின் தங்கம் என்று அன்போடு அழைக்கப்படும்
கேரட்டை பெரும்பாலும் அதிக பரப்பளவில் விவசாயிகள் பயரிட்டுள்ளனர். இங்கு
உற்பத்தி செய்யப்படும் கேரட் தான் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை,
திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு
செல்லப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களான பெங்களூரு, கேரளா
போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் அனைத்து தரப்பினரும்
வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையிழந்து பெரும்
பாடுபட்டு வருகின்றனர். அதனால் கிடைத்த வேலையை செய்வோம் என்று களத்தில்
இறங்கி விட்டனர். தற்போது பட்டதாரி இளைஞர்கள் கேரட் மூட்டை தூக்கும் கூலி
வேலை செய்ய தொடங்கி விட்டனர்.
தினசரி சுமை தூக்கும் ஆண்களுக்கு 800
ரூபாயும், பெண்களுக்கு 400 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. எனவே
கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த இளைஞர்கள், பொறியியல் பட்டப்படிப்பு
படித்த மாணவர்கள் தற்போது கூலி வேலை செய்ய தொடங்கிவிட்டனர்.
எல்லாம் இந்த
கொரோனாவால் தான் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு இதை தவிர
வேறு வழியில்லை எனவும் கவலையுடன் கூறுகின்றனர். கொரோனா உயிரை மட்டுமல்ல...
வாழ்க்கையின் அஸ்திவாரமான பொருளாதாரத்தையும் பறித்துள்ளது என்பதுதான்
நிதர்சனமான உண்மை.