கொரோனாவுக்கு அறிவியல் பூர்வமற்ற சிகிச்சைகள் கையாளப்படுகின்றன
By: Nagaraj Thu, 31 Dec 2020 12:15:34 PM
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில நியாயமற்ற, அறிவியல்பூர்வமற்ற சிகிச்சைகள் (தெரபி) பல்வேறு நாடுகளில் கையாளப்படுகின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் சார்பில் நமது நாட்டில் எடுத்து வருகிறோம். இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில நியாயமற்ற, அறிவியல்பூர்வமற்ற சிகிச்சைகள் (தெரபி) பல்வேறு நாடுகளில் கையாளப்படுகின்றன. இதனால் கொரோனா வைரஸானது உருமாற்றம் பெற்றுள்ளது.
இது வெவ்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகையான சிகிச்சையின் மூலம் சுவாச
உறுப்புகளை பாதிக்கும் கொரோனா வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது
உருமாறி அதிக அளவில் பரவுவதற்கும் வழிவகை ஏற்படுகிறது. இது மிகவும்
கவலைக்குரிய விஷயமாகும்.
இதுபோன்ற சிகிச்சைகளால் பலன் ஏற்பட்டுள்ளது
என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. எனவே அந்த சிகிச்சைகளை
கையாள கூடாது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸால் அதிக
பாதிப்பு இருக்கும் என்று நாங்கள் கவலை அடைந்துள்ளோம். எனவே இந்தியாவிலும்
அதுபோன்ற வைரஸ் பரவி வருகிறதா என்பதை பரிசோதித்து வருகிறோம்.
எனவேதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரவேண்டுமோ அதைக் கொடுத்து வருகிறோம். இவ்வாறு பார்கவா கூறினார்.