சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
By: Nagaraj Sun, 02 Aug 2020 8:48:30 PM
தேர்தலை தள்ளி வைக்க வலியுறுத்தல்... கொரோனா தொற்று அதிகரிப்பு, வெள்ளப் பாதிப்பு சூழலில் பீகாரில் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளதால் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்துரைகளைக் கேட்டிருந்தது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஆகியவற்றைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்று, வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில் தேர்தலை நடத்த வேண்டாம் என பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக்
ஜனசக்தியும் தெரிவித்துள்ளது.
பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்
மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மாநிலத்தின்
வட பகுதியில் 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் 49 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.