- வீடு›
- செய்திகள்›
- சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்ப இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - சுப்ரீம் கோர்ட்டு
சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்ப இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - சுப்ரீம் கோர்ட்டு
By: Karunakaran Sat, 11 July 2020 7:36:21 PM
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. நீதித்துறையிலும் வக்கீல்கள், வழக்குதாரர்கள் என அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது. அதன்பின், நடுவர் மன்ற விசாரணைகள் மற்றும் காசோலை மோசடி வழக்கு விசாரணைக்காக சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது, சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்ப சில விதிமுறை தளர்வுகளை நேற்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தாக்கல் செய்த மனு ஒன்றில் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், ஊரடங்கு காரணமாக வழக்குகளில் சம்மன் மற்றும் நோட்டீஸ் போன்றவை அனுப்புவதற்கு தபால் நிலையங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மேற்படி சேவைகளுக்கு இ-மெயில், பேக்ஸ் அல்லது உடனடி தகவல் சேவைகளை (வாட்ஸ்அப்) போன்றவற்றை கோர்ட்டுகள் பயன்படுத்தலாம் என்று இந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.