இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும்
By: Karunakaran Thu, 15 Oct 2020 1:55:19 PM
முதல் பிரசவம் சிசேரியன் ஆபரேசனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது அடுத்த குழந்தைக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். காரணம், ஆபரேசனால் உண்டான புண்கள் குறைந்தது 3 மாதமாகும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதிருக்கும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் 18 மாதம் இடைவெளி இருப்பது நல்லது.
உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும். பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது.
முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லை என்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கு தாயிடம் இருந்து சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. பிரவசவத்தின் போது நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பல உடல் நலக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனால், இரண்டாம் குழந்தைக்கு குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனமும், அடுத்த குழந்தைக்கு கொஞ்சம் கால இடைவெளியும் எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி களை கட்டும். எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.