- வீடு›
- விளையாட்டு›
- ஐபிஎல் 2020 தொடரில் ஸ்பான்சர் விவோ கிடையாது; பிசிசிஐ அறிவிப்பு
ஐபிஎல் 2020 தொடரில் ஸ்பான்சர் விவோ கிடையாது; பிசிசிஐ அறிவிப்பு
By: Nagaraj Thu, 06 Aug 2020 8:11:23 PM
ஐபிஎல் 2020 தொடரில் ஸ்பான்சர் விவோ கிடையாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2020 தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் ஐபிஎல் தொடர் விவோ ஐபிஎல் 2020 என்ற பெயரிலேயே வந்தது. இதனால் ஐபிஎல் தொடரின் தலைப்பு ஸ்பான்சராக சீனாவை தளமாகக் கொண்ட மொபைல் போன் நிறுவனமான விவோவை தொடர பிசிசிஐ முடிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆனால் தற்போது ஐபிஎல் 2020 தொடரில் ஸ்பான்சர் விவோ கிடையாது என்று பிசிசிஐ கூறியுள்ளது. "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான தங்கள் கூட்டணியை நிறுத்த முடிவு செய்துள்ளன" என்று பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சர்ஷிப் உரிமையை விவோ, 2018 முதல் 2022 வரை ஐந்து
ஆண்டுகளுக்கு ரூ. 2190 கோடிக்கு, அதாவது ஆண்டுக்கு சுமார் 440 கோடி
ரூபாய்க்கு பெற்றிருந்தது.
விவோ தானாகவே முன்வந்து இந்த ஆண்டுக்கான
ஐபிஎல் ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த
செய்தி அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் "பிசிசிஐ ஒரு முடிவை
எடுத்து விவோவை அகற்றும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால்
பிசிசிஐ பணத்திற்காக அதை செய்யவில்லை.
எனவே இந்த தொடரை
புறக்கணிப்பதற்கும் ஐபிஎல் 2020 தொடருக்கான அனுமதியை நிறுத்துவதற்கும்
நாங்கள் அழுத்தம் கொடுத்தோம். இதையடுத்து ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக
தைரியமான முடிவை சீன நிறுவனம் எடுத்துள்ளது.
ஜூன் 10 முதல் நாடு
முழுவதும் சீனப் பொருட்களின் புறக்கணிப்பு பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி
வருகிறோம். இதற்கு லட்சக்கணக்கான இந்திய மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்"
என்று பேசியுள்ளார்.