புனித யாத்திரை மேற்கொள்வோரை வெகுவாகக் கவரும் சுசீந்திரம்!
By: Monisha Wed, 23 Sept 2020 12:59:48 PM
தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலமாக விளங்கக் காரணம், இங்கு அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் ஆகும். இந்நகரமே பழங்கால திருவாங்கூர் சமஸ்தான கோட்டையாக விளங்கியது.
இங்கு மார்கழித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து பலமக்கள் இவ்விழாக்களில் பங்கு கொள்கின்றனர். மார்கழித் திருவிழா டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளான ஒன்பதாவது நாளன்று, இந்து சமய கடவுளரின் சிலைகள் தேர்களில் ஏற்றப்பட்டு நகர் முழுதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
மற்றொரு திருவிழாவான சித்திரைத்திருவிழா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாணுமாலயன் ஆலயம் மட்டுமின்றி துவாரகைக் கிருஷ்ணர் கோவில், முன்னூற்றிநங்கைக் கோவில், சாஸ்தா ஆசிரமக் கோவில், கருப்பசாமி கோவில், தம்புரான் தம்புராட்டி கோவில், அக்கரைக் கோவில், அனுசூயா ஆத்ரி முனிவர் ஹோமகுண்டம், முத்தாரம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், பேரம்பலம் நடராஜர் கோவில் போன்ற பல கோவில்கள் இந்நகரத்தில் உள்ளன.
தாணுமாலயன் சுவாமி ஆலயத்தில், மூன்று இந்துக் கடவுள்கள்( சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன்), ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருக்கும் விஷேசத்தாலேயே புனித யாத்திரை மேற்கொள்வோரை வெகுவாகக் கவரக் கூடிய இடமாக இது உள்ளது. சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் மற்றும் சுசீந்திரத்திற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற குளச்சல் என்ற நகரம் ஆகியவை மக்களைக் கவரக்கூடிய இடங்கள் ஆகும்.
சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ஆகும். தென்னிந்திய நகரங்களிலிருந்து நேரடியாக பேருந்து மூலமும் சுசீந்திரம் செல்லலாம்.
இந்நகரத்தில் கோடைகாலங்களில் மட்டும் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இதர காலங்களில் ஒரே மாதிரியான சீரான வெப்பநிலையே நிலவுகிறது.