கல்வி செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி தேவியை வணங்கும் முறை

சென்னை: நாம் வணங்கும் தெய்வங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. நமக்கு கல்வி செல்வத்தை அள்ளி தரும் கடவுளாக விளங்குபவள் சரஸ்வதி தேவி.

சரஸ்வதி பூஜை அன்று நம் வீடுகளிலும், தொழில் செய்யும் இடத்திலும் பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கமாகும். கல்வி, தொழில் சம்பந்தமான அனைத்திற்கும் நாம் முதலில் சரஸ்வதி தேவியை வணங்கிய பின்பு தொடங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.

கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் சரஸ்வதியின் அருளை முழுமையாக பெறுவதற்கு புத்தகத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து சரஸ்வதி தேவியின் மடியில் வைத்து கல்வி செல்வதை அள்ளி தருமாறு சரஸ்வதி தேவியை பணிந்து வணங்க வேண்டும். சரஸ்வதி தேவிக்கு பிடித்தமான மலரான வெண் தாமரையை வைத்து வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.

புத்தகங்களை வைக்கும் போது வீட்டில் இருக்கும் கத்தி, உழக்கு, மத்து போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும். இசையைத் துறையில் இருப்பவர்கள் அவரவர் பயன்படுத்தும் இசைக் கருவிகளையும் வைத்து அவற்றிற்கு பொட்டு வைத்து சந்தனம் தெளித்து பூ போட்டு வழிபட வேண்டும்.


சரஸ்வதி பூஜை அன்று நம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டை நன்கு சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.

பின் வீட்டின் வாயிலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை, தோரணம் கட்டி சரஸ்வதி தேவியை வரவேற்க வேண்டும். நம் வாகனங்களை சுத்தம் செய்து அவற்றிற்கும் பொட்டு வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.

பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.