நேற்று திருமலையில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

திருமலை: பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. எனவே அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து கொண்டு வருகின்றனர்.

தமிழக பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறை ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும், எனக் கருதுகிறார்கள். இதனால், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ திருப்பதிக்கு வருகிறார்கள்.

இதனை அடுத்து வருகிற 27-ந்தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. அதையொட்டி நீண்ட தூரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையை நோக்கி பாதயாத்திரையாக வருகிறார்கள். மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அலைமோதியது.

மேலும் திருமலையில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். நேற்று ஏழுமலையானை தரிசிக்க 19 மணி நேரம் ஆனது.