திருவனந்தபுரம்: மண்டல பூஜையையொட்டி நாளை (26ம் தேதி) அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்தே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர்.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும் நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதையடுத்து
தரிசன நேரத்தை அதிகரிக்க தேவசம் போர்டு உத்தரவிட்டது. இருந்தும்
காத்திருப்பு தொடர்ந்தது. எனவே, குழந்தைகள், பெண்கள் மற்றும்
முதியவர்களுக்கு தனி வரிசை அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த
முறை சில நாட்களுக்கு முன் நடைமுறைக்கு வந்தது. இதனால் பக்தர்கள் எளிதாக
தரிசனம் செய்தனர். காத்திருப்பு நேரமும் குறைந்துள்ளதாக பக்தர்கள்
தெரிவித்தனர். கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம்
செய்துள்ளனர்.
முக்கிய திருவிழாவான மண்டல பூஜை நாளை மறுநாள் (27ம்
தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு
வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜையையொட்டி நாளை (26ம்
தேதி) அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை
நடக்கிறது. இதை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது