குயின்ஸ்லாந்து தலைநகரில் இந்து கோயிலை சேதப்படுத்திய மர்மநபர்கள்

மெல்போர்ன்: வெளிநாட்டில் இந்து கோயில்கள் சேதம்... ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் ஸ்ரீலட்சுமி நாராயணர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச்சுவரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதை நேற்று காலை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள், இதுகுறித்து குயின்ஸ்லாந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவில் சுவரை சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுவது இது நான்காவது முறையாகும்.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி மெல்போர்னில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலும், 16ஆம் தேதி விக்டோரியாவில் உள்ள ஸ்ரீசிவ விஷ்ணு கோயிலும், 23ஆம் தேதி மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோயிலும் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.