நிறைபுத்தரிசி பூஜை .. சபரிமலை கோவில் நடை நாளை (3-ந் தேதி) மாலை திறப்பு

கேரளா: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

அதனால் இதற்காக சபரிமலை கோவில் நடை நாளை (3-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் 4-ம்தேதி அதிகாலை கோவில் நடை திறந்ததும் 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.

மேலும் இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

இதை அடுத்து இதற்காக செட்டிகுளங்கரா கோவில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்காக நெற்கதிர்கள் கொண்டுவரப்படும். நிறை புத்தரசி பூஜைக்கு பிறகு 4-ந்தேதி இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.