திருப்பதி: இந்தியாவின் புனிதத் தலங்களில் மிக முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளன. தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் சேவைகளுடன் கூடிய தரிசனம் என பல்வேறு முறைகளில் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகித்து வருகிறது.
இந்த நிலையில் நாளை காலை இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அங்கப்பிரதட்சணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் சென்ற மாதம் முதல் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இலவச டோக்கன்களை இணையம் மூலமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தது. இணையம் மூலம் விநியோகித்தால் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றாக இந்தச் சேவை மாறிவிடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த நிலையில் மீண்டும் இந்த மாதம் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை (20.7.2022) காலை 11 மணிக்கு இதற்கான ஆன்லைன் கவுன்ட்டர் திறக்கப்படும். மேலும் ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்த அனைத்து தினங்களுக்கும் தலா 1,500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.