நவராத்திரி 6ம் நாளில் புஷ்பக விமானத்தில் பெருமாள் எழுந்தருளல்

புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல்... திருமலை திருப்பதியில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ ஆறாம் நாளான இன்று இரவு புஷ்பக விமானத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளினார்.

ஒன்பது நாள் நவராத்திரியில் இன்று ஆறாவது நாள். காலையில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி இரவில் புஷ்பக விமானத்தில் எழுந்தருளினார்.இந்த புஷ்பக விமானம் பதினைந்து அடி உயரமும் பதினான்கு அடி அகலமும் 750 கிலோ எடையும் கொண்டதாகும்.150 கிலோ எடை கொண்ட தென்னை ஒலைகளாலும் பல்வேறு விதமான வாசனை மலர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் ஒரு பக்கம் அனுமாரும் இன்னோரு பக்கம் கருடரும் நடுவில் அஷ்டலட்சுமியும் கூரையில் வீற்றிருக்க நடு நாயகமாக திருமலை வாழ் தெய்வமான சீனிவாசப்பெருமாள் உற்சவர் மலையப்பசுவாமியாக தேவியர் சமேதரராய் எழுந்தருளினார்.

இந்த விமானம் கடந்த பத்து நாட்களாக இருபது கலைஞர்களைக் கொண்டு தேவஸ்தான தோட்டக்கலைத் துறையில் உருவாக்கப்பட்டு உள்ளது, இந்த இருபது கலைஞர்களில் பத்து பேர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். சென்னையைச் சேர்ந்த ராம்பிரசாத் அறக்கட்டளையினர் புஷ்பக விமானம் உருவாக்குவதற்கான செலவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா காரணமாக கோவிலுக்குள் நடைபெற்ற இந்த புஷ்பக விமான சேவையை தொலைக்காட்சி வழியாக பக்தர்கள் தரிசித்தனர்.