தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

சென்னை: தூக்கத்தில் கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சர்ப்பம் துரத்துவது, தீ பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்றெல்லாம் கனவு வரும்.. இயற்கை நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவதாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்புவதுண்டு. அதற்கு தீர்வாகவே இந்த பதிவு.. இதில் கனவில் பஞ்ச பூதங்கள் வந்தால் அதற்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அக்னியை கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும் . உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

இடி மற்றும் மழை சேர்ந்து கனவில் வந்தால், காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்பார்கள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிப்பதாகும். கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதை அறிவிப்பதாகும்.

கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால், வாழ்வில் உயர்வு உண்டாகும். குளத்தில் கால் கழுவுவதை போல் கனவு வந்தால் தரித்திரம் விலகும் என்பதாகும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.

குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியாபார விருத்தியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும். குளத்தில் குளிப்பது போல கனவு வந்தால் இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது என்பது போல், உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் பறிக்க இயலாது என்று பொருள்.

குளம் வறண்டு இருப்பது போல கனவு வந்தால் புதிய செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.