திருச்செந்தூர் ... செல்போனை பாதுகாப்பதற்காக ரூ.5 கட்டணமாக வசூல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று ஆய்வு செய்தார். அதன் பின் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்களின் செல்போனை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு செல்போனிற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதனை அடுத்து திருச்செந்தூர் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை கோவிலுக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லாதபட்சத்தில் மற்ற பக்தர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும். பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும் திருச்செந்தூர் கோவில் உள் பிரகாரத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என அவர் கூறினார்.