சருமத்தை பராமரிக்கணுமா... இயற்கை பொருட்களால் தயாரான நலங்கு மாவு போதும்!!!

சென்னை: சருமத்தை பராமரிக்க நலங்கு மாவு... இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவு சிறந்த ஒன்று ஆகும்.

நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும். முகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர்.

கையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை.

பிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
ரோஜா மொக்கு – 50 கிராம்
சீயக்காய் – 50 கிராம்
அரப்புத் தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
விலாமிச்சை வேர் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பூவந்திக்கொட்டை – 50 கிராம்

செய்முறை: கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும். பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.