அழகு பராமரிப்பிலும் சிறந்து விளங்கும் நல்லெண்ணெய்

சென்னை: உடலுக்கு பல்வேறு விதங்களில் ஆரோக்கியம் தரும் நல்லெண்ணெய் அழகு பராமரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இந்த பதிவில் நல்லெண்ணெய் வைத்து நமது சருமம், தலைமுடி, முகம், உதடுகள், கண்களை அழகுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் நல்லெண்ணெய்யை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அதற்கு பஞ்சு உருண்டையில் நல்லெண்ணெய்யை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

சருமம் கருமையாவதை தடுக்க 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெய்யை எடுத்து, தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்

நல்லெண்ணெய்யை ப்ரிட்ஜில் வைத்து குளிரசெய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.