அழகை மெருகூட்ட அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது எப்படி?

அத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. சில அழகு சாதனப் பொருட்களில் அத்திப்பழம் பயன்படுத்தப்படுகிறது. அது சரும பிரச்சினைகளை சரி செய்வதோடு புத்துயிர் பெறச்செய்யும் தன்மையையும் கொண்டிருக்கிறது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். சரி அத்திப்பழங்களை எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்!

சருமத்தில் சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்போது முகத்தின் அழகு பாதிப்புக்குள்ளாகும். சருமத்திற்கு பளபளப்பு ஏற்படுத்திகொடுக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மெலனின் உற்பத்தியை குறைத்து சரும அழகை பேணிக்காக்கவும் வழிவகை செய்யும்.

சருமத்தில் திட்டுக்கள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அத்திபழத்தை பயன்படுத்தலாம். அத்தி பழம் ஒன்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் மென்மையாக தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவி விடவும். வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் பிரகாசிக்க தொடங்கும்.

முகத்தில் கொப்பளங்களோ, முகப்பருக்களோ இருந்தால் அத்திப்பழத்தை நேரடியாகவே உபயோகிக்கலாம். மருக்களை நீக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்தி பழத்தை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து மருவில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

முகம் சட்டென்று பளபளப்புடன் மின்னுவதற்கு அத்திப்பழத்தை உபயோகப்படுத்தலாம். ஒரு அத்திப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர், தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வழக்கத்தை விட சருமம் பிரகாசத்துடன் காட்சியளிப்பதை உணரலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்தான் முடி உதிர்வதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அத்திப்பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த பழத்தை சாப்பிடலாம்.