சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் தேவை

சென்னை: பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் போனாலும் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். அது சருமத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி ஏராளமான சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவும். இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.

அது பகல் பொழுதில் சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு வழிவகை செய்யும். சரும துளைகளை திறந்து அவை சுவாசிப்பதற்கும் உதவும். எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து முழங்கால்கள், முழங்கைகள், மூட்டு பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்துவிடலாம். அது சரும நலனை மேம்படுத்தும். இரவில் தயிருடன் சிறிதளவு ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் தடவலாம். கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடலாம்.

அது சருமத்தை சுத்திகரிக்க வைத்து விடும். அதன்பிறகு மென்மையான டவலால் துடைத்துவிட்டு ஈரப்பதமான மாய்ஸ்சரைசரை உபயோகிக்கலாம். இதன் மூலம் முகம் பிரகாசிக்க தொடங்கும். கணினி, மொபைல், லேப்டாப் அதிக நேரம் பயன்படுத்துபவர்களின் கண்கள் சோர்வுக்குள்ளாகும்.

கருவளையங்களும் உண்டாகும். அதற்கு வெள்ளரிக்காய் இயற்கையான தீர்வை வழங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் கால் மணி நேரம் வைத்திருந்தால் போதும். மனதும், கண்களும் புத்துணர்ச்சி பெறும். பின்னர் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் கொண்டு கண்கள், மூக்கு பகுதியை சுற்றி மெதுவாக தடவி மசாஜ் செய்யலாம்.

தூங்குவதற்கு முன்பு தினமும் இவ்வாறு செய்துவந்தால் காலையில் சோர்வு நீங்கி உற்சாகமாக எழலாம். நல்ல மாற்றங்களையும் உணரலாம்.