எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?

எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் வகை எலுமிச்சை. இது உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் சருமத்தை அழகுபடுத்தவும் உதவுகிறது. இந்த பதிவில் எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

சிலருக்கு அதிகமாக முகத்தில் எண்ணெய் வழியும். இதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை மிகவும் உதவுகிறது. தினமும் எலுமிச்சை எடுத்து அதன் சாற்றினை நீரில் கலந்து அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால் எண்ணெய் சுரப்பு குறையும்.

மேலும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் பிரச்சனை குறையும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி- பாக்டீரியல் தன்மை சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும்.

எலுமிச்சையை சாறு எடுத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகப்பரு வருவதை தடுக்கிறது.

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் அகலும்.