35 வயதை கடந்த பெண்களுக்கு சரும சுருக்கம் இல்லாமல் இருக்க பராமரிப்பது எப்படி ?

35 வயதை கடக்கும் பெரும்பாலானோர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது போன்றவை சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும்.

வாழ்வியல் முறையுடன் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதும் சரும அழகை நிலைத்திருக்க செய்யும். வறண்ட சருமம் கொண்டவர்கள், 200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்து, அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிட வேண்டும். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும்.

இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங் களை மங்க செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அது குளிர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். பின்பு அதனை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.