அழகை கெடுக்கும் மருவை இயற்கை வழியில் போக்கும் முறை

சென்னை: சின்ன மச்சம் ஒருவரது அழகை பலமடங்கு அதிகரிப்பதைப் போல சின்ன மரு அழகையே கெடுப்பதுண்டு. ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும்.மருக்கள் நாளுக்குநாள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

மரு ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லாரும் எதிர்கொள்ளும் பிரச்சினை ஆகும். அதிலும் வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

இஞ்சி: ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி அதை சிறிது தட்டிக் கொண்டு, அந்த சாற்றை மருக்களின் மேல் தேய்த்துவந்தால் மருக்கள் தானாகவே உதிர்ந்து விடும்.

வெங்காயம்: வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் பூசினால் மருக்கள் கொட்டும்.

சீடர் வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் மருக்கள் உதிரும்.

பூண்டு : பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் மருக்கள் மறைய ஆரம்பித்து விடும்.