இரவில் தூங்கச் செல்லும் முன் இவற்றை செய்தால்... நீங்களும் அழகிதான்!

பெண்களே உங்கள் அழகைப் பராமரிக்க ஒவ்வொரு நாள் இரவு தூங்கப் போகும் முன்பும் சில காரியங்களை செய்வது நல்லது. நாம் தூங்கும் போது தான் நம் உடல் சில முக்கியமான வேலைகளை செய்கிறது. எனவே இரவில் தூங்கச் செல்லும் முன் சில காரியங்களைக் கடைப்பிடியுங்கள்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் மேக்கப் முழுவதையும் களைந்து விடுங்கள். முகத்தில் பவுடரோ, உதட்டில் லிப்ஸ்டிக்கோ, கண்களில் ஐ-லைனரோ, எதுவும் இருக்கக் கூடாது. இதனால் உங்கள் சருமத்தில் உள்ள துளைகள் நீங்கள் தூங்கும் போது சுத்தம் செய்யப்பட்டு, காலையில் புத்துணர்ச்சியுடன் எழலாம். தலைக்கு வைத்துப் படுப்பதற்கு 2 தலையணைகளை பயன்படுத்துங்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், நிணநீர் நன்றாக சுரக்கும். இது உங்கள் முகத்திற்கு, முக்கியமாக கண்களுக்கு மிகவும் நல்லது.

உங்கள் முகத்தில் எப்போதும் ஈரப்பதம் இருப்பது அவசியம். இரவில் தூங்கச் செல்லும் முன் செராமைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அடங்கிய மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இது எரிச்சல்கள், வறட்சி மற்றும் அலர்ஜிகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், முகத்திற்கு நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.

பகல் முழுவதும் உலர்ந்த காற்று படுவதாலும், அடிக்கடி கைகளைக் கழுவுவதாலும் அவை வறண்டு போயிருக்கும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கைகளில் நல்ல தரமான க்ரீம்களைத் தடவ வேண்டும். இதனால் கைகளில் தோல் உரிவது நிற்கும்; கைகள் பளபளப்பாகும். விரல்களில் உள்ள நகங்களும் நீண்டு, அடர்த்தியாக வளரும்.

உங்கள் தலையணைகளுக்கு பட்டு போன்ற மெல்லிய உறைகளை உபயோகிக்க வேண்டும். இது உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பெரும்பாலான காட்டன் தலையணை உறைகள் தலைமுடிக்கு நல்லதல்ல. மேலும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலையணை உறைகளை மாற்றுவதும் நல்லது.

உங்கள் தலைமுடிகளில் உள்ள எண்ணெயோ, அழுக்கோ தூங்கும் போது உங்கள் முகத்தில் படாத அளவுக்கு, அதைக் கொண்டை போட்டுக் கொள்ளலாம் அல்லது முடிந்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் 8 மணிநேரம் நன்றாகத் தூங்குவது முக்கியம். அப்போது தான் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியும். கண்களில் ஏற்படும் கருவளையங்கள் குறையும். இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். சரியாகத் தூங்கவில்லையென்றால் முகம் வெளிறிப் போய்விடும். களைப்பாகவும் தோன்றும்.