அழகுக்கு அழகு சேர்க்க உதவும் பன்னீர் ரோஸ் வாட்டர்

சென்னை: ரோஜாப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் பன்னீர் ரோஸ் வாட்டர் இல்லாமல் இன்றைக்கு எந்த ஒரு அழகு ஒப்பனைகளும் இல்லை. உண்மையான, தரமான ரோஸ் வாட்டர் என்பது புதிய பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு ஆவி வடித்தல் முறையின் மூலம் செய்யப்படும் முறை.

இது உங்களுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும். அழகுப்படுத்த பலவகையான பொருட்கள் இருந்தாலும், அதில் ரோஸ் வாட்டருக்கு முதல் இடம் உண்டு. குறைந்த செலவில் நம்முடைய சருமத்தை பராமரிப்பதற்கு இந்த ரோஸ் வாட்டர் அவசியம் தேவை.

வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் கழுத்தை சுற்றி ஒற்றிக் கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தலாம். ரோஸ் வாட்டரில் சிறிது கற்பூரத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.


புதினா சாற்றை ரோஸ் வாட்டரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும்.