சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கும் மாதுளம் பழம்!

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். இந்த பழத்தில் அளவிட முடியாத பல நன்மைகள் உள்ளன. எனவே, அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணும் பழமாக மாதுளை விளங்குகிறது.

முக அழகிற்கான பேஷியல் செய்வதில், முதல்படி கிளென்சிங். இதற்கு மாதுளையின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாதுளை விதை எண்ணெய்யை கொண்டு முகத்தை கிளென்சிங் செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்கள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்படுகின்றன.

மாதுளை விதைகளை பன்னீர் அல்லது சர்க்கரையுடன் கலந்து அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிதுநேரம் கைகளால், மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அப்போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைதும் வெளியேறிவிடும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாகக் கழுவினால், முகம் ஒளிர்வதைக் காணமுடியும்.

மாதுளை சாற்றை முகத்திற்கு இயற்கையான ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம். இதனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து கலவையாக்கி முகத்திறகு பூசலாம். இவ்வாறு செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

மாதுளையில் உள்ள ஃபூனிசிக் அமிலம் பாக்டீரியாவை தொடர்ந்து நீக்குகிறது. இதனால் நாள் முழுவதும் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான சருமம் தக்கவைக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பாக்டீரியா தொற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

மாதுளை தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இதன்மூலம் வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, எதிர்த்து, இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.